அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி, விசாரணை ஆணைய அதிகாரி நீதியரசர் கலையரசன் முன்பு, ஆஜர் ஆனார்.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, புகார்கள் குறித்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நீதியரசர் கலையரசன் கடிதம் எழுதி இருந்தார். எனினும், ஆவணங்களை ஒப்படைக்க அண்ணா பலகலைகழகம் வழங்காமல் இருந்த நிலையில், பதிவாளர் கருணாமூர்த்தி, ஆவணங்களுடன் நேரில் ஆஜராக, நீதியரசர் கலையரசன், நேற்று சம்மன் அனுப்பி இருந்தார்.
இதனையடுத்து, அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான ஆவணங்களுடன், பதிவாளர் கருணாமூர்த்தி, இன்று நீதியரசன் கலையரசன் ஆணையத்தின் முன் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை அடுத்து, விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. சூரப்பா மீதான விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவர் மீதான விசாரணை தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.







