திமுக யாராலும் அடக்க முடியாத யானை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஆளுநர் உரையில் யானையும் இல்லை, மணி ஓசையும் இல்லை என்றும் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்ற பழமொழியை ஒப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவை யானை என்று குறிப்பிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி என்றும், அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள் என்றும், திமுக அடக்க முடியாத யானை எனவும் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், யானைக்கு பலமான 4 கால்களை போன்று திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை ஆகிய 4 கொள்கைகள் தான் பலம் என்று குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டி வைக்கவில்லை என்றும், ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்து அவர்கள் அலட்சியமாக இருந்ததுதான் உண்மை எனவும் தெரிவித்தார். மேலும், “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை அவர் மறந்துவிட்டார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







