சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணம், சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது என கூறியுள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகளும் கேட்டுக்கொண்டனர்.
எனவே, சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், முதல்வர் பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்







