பிரிட்டனில் இருந்து, தமிழகம் வந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 2 ஆயிரத்து 800 பேரில், ஆயிரத்து 549 பேரை கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதில், ஒருவருக்கு இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். புதிய தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், சென்னை கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து நபர்களையும் பரிசோதனை செய்து வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்