சென்னை ஐஐடி.,யில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. தற்போது சில கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை ஐ.ஐ.டி.யைப் பொறுத்தவரை ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் நடைபெற்று வந்த நிலையில், 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
774 மாணவர்கள் தங்கி பயிலும் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவருந்தும் வேளையில் பலருக்கும் கொரோனா தொற்று பரவியதால், உணவருந்தும் கூடம் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுதிகளில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அவர்கள் தங்கி உள்ள அறைகளுக்கே சென்று உணவு விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.







