சென்னை ஐஐடியில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இறுதி ஆண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி தொடங்கி வகுப்புகள் நடைபெற்றன. இதில், மாணவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் உணவுக் கூடம் மூலம் கொரோனா தொற்று பரவியது. முதற்கட்டமாக 104 பேருக்கு தொற்று உறுதியானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மேலும் 79 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. இதனால், ஐஐடியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐஐடியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் தேவை என தெரிவித்த அவர், நோய்த்தொற்று குறைந்து விட்டதாக எண்ணி பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என கூறினார். மேலும், பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.







