சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில், பிற மாவட்ட பக்தர்களுக்கும் அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில், இன்று தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி வரை, ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் கலந்து கொள்ள வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆட்சியரின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை, என உத்தரவிட்டனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும், என அறிவுறுத்திய நீதிபதிகள், விழாவில் பங்கேற்க பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர். முன்னுரிமை அடிப்படையில் 200 பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரையும், 6 மணியில் இருந்து 7 மணி வரையும், தலா 200 பக்தர்களை அனுமதிக்க வேண்டும், எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்