காலாவதியான ஓட்டுனர் உரிமங்கள், வாகன ஆவணங்கள், ஆகியவையை புதுபிப்பதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தாண்டு பிப்ரவரி முதல், ஜூன் வரையில் காலாவதியாகும் வாகன சான்றுகளை, ஜூன் மாதத்துக்குள் புதுப்பிக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அவகாசம் வழங்கியது. பின்னர் அந்த அவகாசம், இம்மாதம் ( டிசம்பர்) 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த பிப்ரவரி மாதம் 1ம்தேதியுடன் முடிவடைந்த வாகன ஆவணங்கள் மற்றும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பு காலவாதியாகும் ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசென்ஸ்கள், ஆர்.சி புத்தகங்கள் மற்றும் அனுமதிகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் காலாவதியான ஆவணங்கள் வைத்திருக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வாகனங்களுக்கான ஆவணங்கள் அனைத்துக்கும் இதுவரை 4 முறை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







