மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வத்திராயிருப்பைச் சேர்ந்த அந்த கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே அவர் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில் கொரோனா அறிகுறி காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 7.55 மணி அளவில் மாதவராவ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இன்று மாதவராவின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் மாதவராவ் இறப்பதற்கு முன்பே வாக்குப்பதிவு முடிந்ததால் வாக்கு எண்ணிக்கை முறைப்படி நடைபெறும் என்றும், அவர் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.