விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில் முறையாக அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தியதை கண்டித்து மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசலிங்கம் கல்வியியல் கல்லூரிக்கான அனுமதியை கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் திரும்ப பெற்றது. ஆனால் இதனை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்தின் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முறையான அனுமதியின்றி தொடர்ந்து மாணவர் சேர்க்கையை நடத்தி வந்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களை சேர்க்க அணுமதி கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனையறிந்த மாணவிகள் வாரத்தின் முதல் வேலை நாளான நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
—-வேந்தன்







