நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு வாரண்ட் அனுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது ஆனால் அதனை நாங்கள் விரும்பவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சேர்ந்த மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அரவக்குறிச்சி தாலுகாவில் இருந்து புகலூர் தாலுகாவிற்கு நிலத்தடி நீரை பைப் லைன் மூலம் கொண்டு செல்ல கரூர் மாவட்ட ஆட்சியர் கடந்த நவம்பர் 18ஆம் தேதி தனி நபருக்கு அனுமதி அளித்துள்ளார். சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் மூலம் தனியார் நிலத்திற்கு அரவக்குறிச்சி தாலுகாவில் இருந்து புகலூர் தாலுகாவிற்கு நிலத்தடி நீரை கொண்டு செல்ல அனுமதி கொடுப்பதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் அபாயம் உள்ளது.
மேலும், விவசாய பணிகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சாலைகளை தோண்டி பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் உள்ள சாலைகள் பழுதாகி உள்ளது. எனவே அரவக்குறிச்சி தாலுகாவில் இருந்து புகலூர் தாலுகாவிற்கு தனியார் நிலத்தில் இருந்து நிலத்தடி நீரை கொண்டு செல்ல கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த அனுமதியை ரத்து செய்து, இடைக்காலத் தடை விதிக்கக் வேண்டும்” என கூறியிருந்தார்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே பைப்லைன் அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் எவ்வாறு பைப்லைன் அமைக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதிக்கிறது? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு மணி நேரத்தில் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.ஆனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தொடர்ந்து வீடியோ கான்பரன்சில் ஆஜராகவில்லை.
நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு வாரண்ட் அனுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது ஆனால் அதனை நாங்கள் விரும்பவில்லை.எனவே நீதிமன்ற கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுகிறது. ஜனவரி 4 ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பின்பும் அதிகார பலத்தால் எதிர்மனுதாரர் சாலைகள் நடுவே பைப் லைன் அமைத்துள்ளார். அதனை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.







