அயோத்தியில் தான்னிப்பூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மசூதியின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு வழங்கி உத்தரவிட்டது. அதேநேரத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி தான்னிப்பூர் கிராமத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. புதிய மசூதி கட்டுவதற்கு அடுத்த மாதம் 26ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2,000 பேர் அமர்ந்து தொழுகை செய்யும் வகையில் மசூதி கட்டப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் மசூதி அருகே மருத்துவமனை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.







