அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து, சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் மேலும் சில மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நீண்ட மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




