ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை ரூ.350 கோடிக்கு ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். இது அவர் தயாரிக்கும் 50 வது படம். ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ஜெயராம், அஞ்சலி, தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பாடல் காட்சி படப்பிடிப்பு புனே அருகே, கடந்த மாதம் தொடங்கியது. தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில், இந்தப் பாடல் காட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் சில வசன காட்சிகளும் படமாக்கப் பட்டுள்ளன. முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்கப் பட இருக்கிறது.
இந்நிலையில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் ரூ.350 கோடிக்கு வாங்கிவிட்டதாக தெலுங்கு சினிமாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமை, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டூடியோஸ் பெற்றுள்ளது. ஆனால், வெளிநாட்டு விநியோக உரிமை, பாடல்கள், ரீமேக் உரிமை கொடுக்கப்படவில்லை.
படத்தின் அடுத்த ஷெட்யூல் தொடங்கும் முன்பே, படத்தின் மொத்த பட்ஜெட்டும் தயாரிப்பாளர் தில் ராஜூக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.