தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசினர் விமானத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி விடுதலையான ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்தார். இதனால் பினராயி விஜயன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கேரள மாநில எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கினர். மேலும் காங்கிரஸ், பாஜக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் முதலமைச்சர் பினராயி விஜயன் பலத்த பாதுகாப்புடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவர் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அப்போது, விமானத்தில் ஏறியதும் அங்கு இருந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கம் இட்டனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமானத்தின் உள்ளேயே போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் மட்டனூர் தலைவர் ஃபர்சின் மஜீத், மாவட்ட செயலாளர் நவீன்குமார், செயலாளர் சுனித் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பினராயி விஜயன் ஆதரவாளர் அவர்களை கீழே தள்ளிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து பினராயி விஜயன் வெளியேறிய போதும், அங்கு காத்திருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக-வினர் அவருக்கு எதிராக முழக்கமிட்டப்படி போராட்டம் நடத்தினர். இவ்வாறு வழி நெடுக பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே, இந்த போராட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பதில் அளித்துப் பேசுகையில், கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில் நடந்தது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றும், காங்கிரஸ் தலைவர்களின் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







