இறந்தும் 4 பேருக்கு கண் பார்வை கொடுத்த பொள்ளாச்சி இளம் மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வரும் முரளி என்கிற
பழனிக்குமார் (55), வசந்தி (46) தம்பதியரின் மகன் பாலாஜி நாராயணன் (25). மைதிலி (23) என்ற மகளும் உள்ளார். இதில், பாலாஜி நாராயணன் ரஷ்யாவில் 6 ஆண்டுகள் மருத்துவப் படிப்பை படித்துவிட்டு இந்தியா வந்து 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்று, கொரோனா காலங்களில் திருப்பூர், ஈரோடு பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டாக்டர் பாலாஜி நாராயணன் மருத்துவ சேவை புரிந்துள்ளார். அண்மையில் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், டாக்டர் பாலாஜி நாராயணன் மருத்துவ மேற்படிப்பு படிக்க
வீட்டிலிருந்து படிப்பதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக பொள்ளாச்சி வெங்கட்ரமண
வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த
சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் பாலாஜி நாராயணனுடன் மருத்துவ படிப்பு
படித்த சென்னையைச் சேர்ந்த திலீப் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இந்நிலையில், அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டாக்டர் பாலாஜி
நாராயணன் கடந்த 26 -ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து சென்னை பல்லாவரத்தில்
நண்பன் திலீப் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னையில்
சாலிகிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மகன் அசோக் நாராயணன் வீட்டில் பாலாஜி
நாராயணன் தங்கினார்.
28-ம் தேதி இரவு பொள்ளாச்சி திரும்புவதற்காக இரவு பேருந்துக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்தபோது திடீரென உடல்நிலை சரியில்லை என கூறிய பாலாஜி நாராயணன் அப்படியே மயங்கி கீழே விழுந்தார். அதன் பின்னர் உறவினர்கள் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடலை பரிசோதித்துப் பார்த்தபோது பாலாஜி நாராயணன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
பாலாஜி நாராயணன் இறந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சியில் உள்ள அவரது தந்தை
முரளிக்கு தெரியப்படுத்தப்பட்டது. தகவலைக் கேட்ட முரளியின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை விரைந்த அவர்கள் மகன் பாலாஜி நாராயணனின் உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பொள்ளாச்சிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர். ஏற்கனவே பாலாஜி நாராயணன் தனது இரண்டு
கண்களையும் தானம் செய்திருந்ததால் சென்னையில் உள்ள சங்கர் நேத்ராலயா
மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தற்போது பாலாஜி நாராயணன் கண் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
டாக்டராகி சிறு வயதிலேயே மரணத்தை சந்தித்த பொள்ளாச்சி மருத்துவர் பாலாஜி நாராயணன் இறந்தும் நான்கு பேருக்கு கண் பார்வை கொடுத்து ஒளி கொடுத்து தெய்வமாக நிலைத்து நிற்கிறார் என்ற மன ஆறுதலுடன் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மனிதனின் கண் கார்னியா பல அடுக்குகள் கொண்டது. குறிப்பாக பொள்ளாச்சியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரின் கண் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்ததால் கார்னியா வெளிப்புற அடுக்கு பாதிக்கப்பட்டவருக்கு எடுத்துப் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறம் உள்ள அடுக்கை அறுவை சிகிச்சை செய்து அது பாதிக்கப்பட்ட இன்னொருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று இரண்டு கண்ணில் இருக்கும் வெளி மற்றும் உள்புற அடுக்களை எடுத்து நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா