உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத், முதலமைச்சராக முதல்முறையாக தனது சொந்த கிராமத்திற்குச் சென்று தனது தாய் சாவித்ரி தேவியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட்டின் கார்வால் மாவட்டத்தில் உள்ள பாஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான யோகி ஆதித்யாநாத், துறவியாகி பின்னர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மடத்தின் மடாதிபதியாகவும் ஆனவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2017ல் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பாஞ்சூர் சென்ற யோகி ஆதித்யாநாத், அதன் பிறகு தற்போதுதான் முதல்முறையாக அங்கு சென்றுள்ளார். அவரது வருகையை ஒட்டி பாஞ்சூர் கிராமமே பரபரப்பில் மூழ்கியது. பாஞ்சூரில் தனது வீட்டிற்குச் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்ற யோகி ஆதித்யாநாத், அது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யோகி ஆதித்யாநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது இறுதிச் சடங்கில் யோகி ஆதித்யாநாத் பங்கேற்கவில்லை.
உத்தரகாண்ட்டில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள யோகி ஆதித்யாநாத், யாம்கேஷ்வரில் உள்ள மகாயோகி குரு கோரக்நாத் மகாவித்யாலயா எனும் கல்விநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தனது ஆன்மிக குருவும், கோரக்பூர் மடத்தின் முன்னாள் மடாதிபதியுமான மகந்த் அவைத்யாநாத்தின் சிலையை திறந்து வைத்தார். இதில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, முன்னாள் முதலமைச்சர் திரிவேந்தர சிங் ராவத், அமைச்சர்க் சத்பால் மகாராஜ், தான் சிங் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று ஹரித்துவார் செல்லும் யோகி ஆதித்யாநாத், அங்கு கங்கைக்கரையில் உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறையால் கட்டப்பட்டுள்ள பாகிரதி எனும் நட்சத்திர ஹோட்டலை திறந்து வைக்கிறார்.