கணவர் இறங்கியதாக எண்ணி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்!

கணவன் பேருந்தில் இருந்து இறங்கியதாக எண்ணி பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயமடைந்தார்.

கேரளா மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் மருதன். இவரது மனைவி மஞ்சு (38). இவர்கள் இருவரும் தங்களுடைய குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக நேற்று (பிப்.27) காலை அட்டப்பாடியில் இருந்து கோவைக்கு வந்தனர். பின்னர் வேறொரு பேருந்து மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பேருந்து ஆட்சியர் அலுவலகம் வருவதற்கு முன்பே மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு வந்து நின்று கொண்டிருந்தார்.

பேருந்து ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயில் அருகே வந்தபோது திடீரென்று ஓடும் பேருந்தில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறங்கியதாக எண்ணி மஞ்சு பேருந்தில் இருந்து கீழே குதித்தாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.