இளையராஜா கருத்தை இடதுசாரிகள் ஏன் ஏற்கவில்லை?- குஷ்பு

கருத்துச் சுதந்திரம் கேட்கும் இடதுசாரி கட்சிகள் இளையராஜாவின் கருத்தை ஏன் ஏற்கவில்லை? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். உலக பாரம்பரிய தினம் மற்றும்  பாஜக நிறுவன தின கொண்டாட்டங்களின்…

கருத்துச் சுதந்திரம் கேட்கும் இடதுசாரி கட்சிகள் இளையராஜாவின் கருத்தை ஏன் ஏற்கவில்லை? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக பாரம்பரிய தினம் மற்றும்  பாஜக நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக `தூய்மை இந்தியா பணி’ திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் கடந்த சில தினங்களாக தூய்மைப்பணிக்கான சில முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை பட்டினப்பாக்கத்தில் துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ சுந்தர், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், பா.ஜ.க. செய்தி  தொடர்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கெளரவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறோம். மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள் தான் இன்று ஒன்று திரண்டு அம்பேத்கர்-மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகளால் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் நிர்வாகத்தில் மாசு ஏற்பட்டுள்ளது. அதை சரியான முறையில் சரியான நேரத்தில் தமிழக மக்கள் தூய்மைப்படுத்துவார்கள். மேலும் ராமேஸ்வரத்தில் அனுமானுக்கு சிலை அமைப்போம் என பிரதமர் மோடி கூறியதை தமிழக பாரதிய ஜனதா வரவேற்கிறது. அதேபோல மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து இந்தத் திட்டத்தை தமிழக அரசும் வரவேற்க வேண்டும். அனுமன் தான் இந்த நாட்டின் பாதுகாவலன் என்றார்.

அதை தொடர்ந்து பட்டினப்பாக்கம் கடற்கரையில் இருந்த குப்பைகளை சுதாகர் ரெட்டி, குஷ்பு, கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.