இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை அணியும், குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி முதலாவது குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அடுத்ததாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது.
இதனை தொடர்ந்து இறுதிப்போட்டியின் சென்னை அணியுடன் மோதும் அணியை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில், குவாலிஃபயர் 1-ல் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது குஜராத் அணி. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று இறுதிப் போட்டியை சந்திக்கின்றன.
ஐபிஎல் போட்டி தொடரில், 10வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ள சென்னை அணி, 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து 2-வது ஆண்டாக கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு களமிறங்குகிறது.
இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக 20 கோடி ரூபாயும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசு வழங்கப்படவுள்ளது. எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர்-2ல் தோற்ற அணிகளான மும்பைக்கு 7 கோடி ரூபாயும், லக்னோ அணிக்கு 6 கோடியே 50 லட்ச ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.