டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை வீழ். தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால்பதித்தது. கோலி-சூர்யா கூட்டணி வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர்.
இதேபோல் இன்றைய ஆட்டத்திலும் விராட், மற்றும் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மீது ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.
2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோரும் கைகொடுத்தால், எதிரணியை அச்சுறுத்தலாம்
விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது யார் என்பதில் ‘சஸ்பென்ஸ்’ நீடிக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக்கில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட இறங்கினார். அரைஇறுதியில் யாருக்கு வாய்ப்பு என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இந்த ஆட்டத்தில் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது’ என்று கூறி நழுவினார்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர்12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 7 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்ததால் தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது.
இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
பந்து வீச்சில் சாம் கர்ரன் (10 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் மார்க்வுட் (9 விக்கெட்), டேவிட் மலான் ஆடுவது சந்தேகம் தான். அவர்களது காயத்தன்மை இன்று எப்படி இருக்கிறது என்பதை பார்த்து முடிவு செய்வோம் என்று அந்த அணியின் கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணியில், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
2011ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிற்கு உலக கோப்பை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இந்த போட்டியில் உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்றைய ஆட்டமானது மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.







