நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ’தலைவர் 170’ படத்தின் படபிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ’ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனிடையில் ‘தலைவர் 170’ படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்கவுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தில் நடித்து முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் தானும் நடிப்பதாக இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது, ‘தலைவர் 171’ படத்தில் முக்கிய வேடத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகன் யாஷ் நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.







