முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று (மே 18) விடுதலை செய்தது.
அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்தி இவர் விடுதலை செய்யப்பட்டார்.
142 பிரிவு என்றால் என்ன? இதற்கு முன்பு உச்சநீதிமன்றம் இந்தச் சட்டப் பிரிவை எந்தெந்த வழக்குகளில் பயன்படுத்தியுள்ளது? என்று பார்ப்போம். நிலுவையில் இருக்கும் எந்தவொரு வழக்கையும் அல்லது எந்தவொரு விவகாரத்தையும் முடிக்க வேண்டிய அவசியம் இருந்தால் அதை உச்சநீதிமன்றம் செய்து முடிக்க அரசமைப்புச் சட்டம் 142 ஆவது பிரிவு அனுமதிக்கிறது. இந்தச் சட்டப்பிரிவை பேரறிவாளன் விடுதலைக்காக உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பல முக்கியமான வழக்குகளில் தனக்கு அதிகாரம் அளிக்கும் இந்தச் சட்டப் பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எந்தெந்த வழக்குகளில் 142ஆவது பிரிவு பயன்படுத்தப்பட்டது?
இந்த சட்டப் பிரிவை ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலப் பிரச்னையைத் தீர்த்து வைக்க உச்சநீதிமன்றம் இந்தச் சட்டப் பிரிவை பயன்படுத்தியது. அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசு நியமித்த அறக்கட்டளையிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சம்பந்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கை உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் இருந்து லக்னோவுக்கு மாற்றவும் இந்தச் சட்டப் பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் எரிவாயு கசிவு வழக்கிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கவும் இந்தச் சட்டப் பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது. 2013இல் ஐபிஎல் ஸ்பாட்-ஃபிக்சிங் முறைகேடு தொடர்பாக விசாரிக்க உத்தரவிடவும் இந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.