தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்திருப்பதாக கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தெரிவித்தார்.
கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார். கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறும் விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், இளம் தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் டி.ஆர் பி.ராஜா, தொழில்துறை உயர் அதிகாரிகள் ஸ்டார்ட் அப் விழாவில் பங்கேற்றுள்ளனர்.ஸ்டார்ட் அப் திருவிழாவில் 450 அரங்குகள் கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ வேண்டும். சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி முக்கியமானது. 450 அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முக்கியம். 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளன. மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை. திருக்குறளைப் போல் நெறிப்படுத்தி அதிகாரத்தைச் செயல்படுத்திவருகிறோம்.
இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கியுள்ளோம். சமூக நீதியுடன் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம். பல்வேறு மாவட்டங்களில் வட்டார தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.







