ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு!

ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நிலையில், மேலும் உயர்ந்துள்ளது.

 

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, நேற்று மாலை வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவோ அல்லது பரிசல் சவாரி செய்யவோ மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மத்திய நீர்வளத் துறையினர் நீர்வரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் உள்ள நீர்வரத்து அளவீடு நிலையத்திலும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும்.

இந்த திடீர் நீர்வரத்து அதிகரிப்பு, காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.