தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் பொய் என நித்யா மேனன் கூறியுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நித்யா மேனன் ஹனுமன் என்ற இந்திய – ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1998ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதற்கு பிறகு 2006ஆம் ஆண்டு 7 O’Clock என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார்.
கன்னடத்திலும்,மலையாளத்திலும் தான் அறிமுகமான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மலையாளத்தில் வெள்ளதூவல், கேரளா கஃபே, ஏஞ்சல் ஜான், அபூர்வ ராகம், அன்வர் என வரிசையாக் நடித்தார். அந்தப் படங்களிலும் அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்தது. மலையாளத்தில் இப்படி பிஸியாக இருந்த அவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.
இப்படி கன்னடம், மலையாளம், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வந்த நித்யா மேனன் தமிழில் 180 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை,ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அவரது தமிழ் கரியரில் ஓ காதல் கண்மணியும், திருச்சிற்றம்பலமும் முக்கியமான படங்களாக அமைந்தன. குறிப்பாக திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். குறிப்பாக பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மேல் இருக்கும் காதலை வெளிக்காட்ட முடியாமல் திணறும் இடத்திலும் நித்யா மேனனின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நித்யா மேனன், “தெலுங்கு சினிமாவில் நடித்தபோதுகூட எனக்கு எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் நடித்தபோது ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் ஹீரோ என்னை ரொம்பவே டார்ச்சர் செய்தார்” என்று ஒரு பேட்டியில் பேசியதாக தகவல் வெளியானது.
இந்தத் தகவல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அவர் விஜய், தனுஷ் உள்ளிட்டோருடனும்கூட நடித்திருக்கிறார். இந்த சூழலில் அவர் இந்தத் தகவலை முற்றிலும் மறுத்து; மிகவும் வருத்தமாக இருக்கிறது. அப்படி நான் சொல்லவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.







