விஷால் புகார் – சிபிஐ வழக்குப்பதிவு

‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி…

‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இதனிடையே, மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு சினிமா துறையினரிடம் மட்டுமன்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், லஞ்சம் பெற்ற திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.