நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் துணை குடியரசுத் தலைவர் – குணமடைய வேண்டி பிரதமர் மோடி வாழ்த்து!

நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும் மாநிலங்களவைத் தலைவராக பதவி வகித்து வருவபவர் ஜக்தீப் தன்கர். 73 வயதான இவருக்கு இன்று(மார்ச்.09) அதிகாலை 2 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரை  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு  இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தலைமையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து ஜக்தீப் தன்கரின்  உடல் நிலை குறித்து விசாரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் விரைந்தார்.

இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,  “துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின்  உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.