விடுதலை பாகம் 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த ’அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றிமாறன், அடுத்து சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.
எனவே வாடிவாசல் திரைப்படம் விடுதலை படத்திற்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டார் வெற்றிமாறன். விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த காட்சிகளை மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்த வேலைகள் எல்லாம் முடிந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு இந்த ஆண்டு இறுதியை எட்டிவிடும் என்பதால் மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்டது. இருந்தும் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.
கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை – 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்றும் கூறப்படுகிறது.







