தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் மூத்த தமிழ் அறிஞருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936ஆம் ஆண்டு பிறந்தவர் அவ்வை நடராஜன். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவர், மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். 1975 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராகவும், 1984 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவ்வை நடராஜன், 1992 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், 2015 ஆம் ஆண்டு சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்தார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்ற அவர், சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். 85 வயதில் மறைந்த அவருக்கு, பல்வேறு தமிழறிஞர்களும், கவிஞர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.