வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெறுவது போல அரியலூரிலும் இந்த போட்டி நடந்த ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொட்டக்கொல்லை கிராமத்தில்
இயங்கி வரும் மச்சான்ஸ் கறி உணவகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை
முன்னிட்டு உணவுத்திருவிழா போட்டி நடைபெற்றது. மச்சான்’ஸ் கறியின் மாபெரும் பரோட்டா உண்ணும் போட்டி மாலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போட்டியின் விதிமுறைகள்
தனிநபர் ஒருவர் 30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசளிக்கப்படும். முடியாதவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான பணம் செலுத்த வேண்டும். அடுத்தது ஒரு டேபிளில் நான்கு பேர் அமர வேண்டியது அதில் யார் 30 நிமிடங்களில் அதிக புரோட்டா உண்ணுகின்றார்களோ அவரை வெற்றியாளராக அறிவித்து அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசு வழங்கப்படும். அடுத்து 4 பேர் கொண்ட டேபிளில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 பரோட்டா உண்ண வேண்டும். முழுமையாக உண்ணப்படும் பரோட்டா மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். போட்டி முடியும் வரை கண்டிப்பாக வாந்தியெடுக்கக் கூடாது. வெற்றியாளர் தவிர டேபிளில் எஞ்சியுள்ள மூவரும் தாங்கள் உண்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் படி நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கு பெற்றனர். இதில் சூர்யா என்பவர் பத்து புரோட்டா சாப்பிட்டு முதல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். கிராம பகுதியில் இந்த வித்தியாசமான போட்டி நடைபெற்றதால் போட்டியில் கலந்து
கொள்வதற்காகவும், பார்வையாளர்களாகவும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரி பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு புரோட்டா சாப்பிட்டதை அங்கு உள்ளவர்கள் சுட்டிக்காட்டி காமெடியாகவே பேசிச் சென்றதை காண முடிந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் தமிழ் மன்னன் கூறுகையில் நாங்கள் ஹோட்டலில்
சாப்பிட வேண்டும் என்றால் ஜெயங்கொண்டம் அல்லது அரியலூர் தான் செல்ல வேண்டும்.
இதனால் நான் சிங்கப்பூரில் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் இப்பகுதி
மக்கள் பயன்படும் அளவில் ஒரு நல்ல ஹோட்டலை துவங்கி மக்களுக்கு பயன்படும்
அளவுக்கு நடத்தி வருகின்றேன் என கூறினார்.