இந்தியா அமெரிக்காவின் தவிர்க்க இயலா கூட்டாளி என்று அந்நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பெர்ரி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய கரின் ஜீன் பெர்ரி, அமெரிக்காவைப் பொருத்தவரை கூட்டாளி என்றால் அது தவிர்க்க இயலாத கூட்டாளிதான் என தெரிவித்தார். இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்பு, இந்தோ பசுபிக் பிராந்தியத்தை சுதந்திரமானதாகவும், அனைவருக்குமானதாகவும் மாற்ற வேண்டும் என்ற உறுதியின் அடிப்படையில் உள்ளது என குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அடுத்து, இந்தியா உடனான அமெரிக்காவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த கரின் ஜீன் பெர்ரி, உக்ரைனில் சட்டத்தின் ஆட்சிக்கும், மனித உரிமை மற்றும் மனித கெளரவத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
வரும் காலங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அமைதி, வளம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு இருக்கும் சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்தைக் காப்பாற்ற போராடுவதாகவும் அவர்களுக்கு உதவும் நோக்கிலேயே கூடுதலாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அந்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கரின் ஜீன் பெர்ரி தெரிவித்துள்ளார்.