நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளார்.
நடிகர் ஜெயம்ரவி பொன்னியின் செல்வன் – பாகம் 1 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. ஜெ.ஆர்.30 என இந்த படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், ஜெயம் ரவியின் 31-வது படம் குறித்த அப்டேட் வருகிற 29-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
ஜெயம் ரவியின் 31-வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
– இரா.நம்பிராஜன்








