கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில், ஊழல், வளர்ச்சியின்மை, மற்றும் அமைதியின்மைக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வடகிழக்கு மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியில் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலை திட்ட பணிகள் உள்பட 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, கால்பந்து போட்டியில் ரெட் கார்டு வழங்கப்படுவதை போல, கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில், ஊழல், வளர்ச்சியின்மை, மற்றும் அமைதியின்மைக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு வரை, வடகிழக்கு மாநிலங்களுக்கு வாரத்திற்கு 900 விமானங்களே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரத்திற்கு ஆயிரத்து 900 விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் 6 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும் இதற்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.