மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி விடுத்துள்ள கண்டன பதிவில், “பிரதமரின் மௌனம் மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டுச் சென்றுள்ளது; மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது, I.N.D.I.A. அமைதியாக இருக்காது; மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்; சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி” என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில், “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்து திகைப்படைந்தேன். நமது மனசாட்சி எங்கே? இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, பச்சாதாபமும் மரியாதையும் கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும், இது மனிதாபிமானமற்ற செயல் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இளம்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆடை கலைப்பு சம்பவம் மனிதகுலத்திற்கு எதிரானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, இதில் தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.