திருச்சி நகை கொள்ளையில் திருப்பம் : 4மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை கைது செய்த போலீஸ்

திருச்சி நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை 4 மணி நேரத்தில் அதிரடியாக போலீஸ் கைது செய்து நகைகளை மீட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு…

திருச்சி நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை 4 மணி நேரத்தில் அதிரடியாக போலீஸ் கைது செய்து நகைகளை மீட்டுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசித்து வரும் ஜோசப் என்பவர் நகை பட்டறை வைத்துள்ளார். நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார்.

இன்று காலை வந்து பார்க்கும் போது கடையில் இருந்த 950 கிராம் தங்கம், 250 கிராம்
வெள்ளி, மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணம்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் மற்றும்
கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் காவல்துணை ஆணையர் அன்பு காவல் உதவி ஆணையர் நிவேத லட்சுமி
நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாநகரில் நகை பட்டறையில் சுமார் ஒரு கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருச்சி மாநகர காவல்துறை விரைந்து செயல்பட்டு நகை கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், கொள்ளையடிக்கபட்ட நகைகளையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பரணிகுமார் மற்றும் சரவணன் ஆகியோரை காவல்துறை அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட  பரணிகுமார் (23) திருச்சி மாவட்டம் கருவாட்டுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர். இவர்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஏற்கனவே அடைக்கப்பட்ட நபர் என்பது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மீது திருச்சி கோட்டை காவல் நிலையத்தில்  8 வழக்கு, காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் மூன்று வழக்கு, அரியமங்கலம் காவல் நிலையத்தில் நான்கு வழக்கு, ஏர்போர்ட் காவல் நிலையத்தில்
ஒரு வழக்கு, திருச்சி திருவெறும்பூர் மற்றும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மற்றொரு நபரான சரவணன்(22)  திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர். இவர் மீது திருச்சி கோட்டை, பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட இந்த  இரண்டு நபர்களையும்  கொள்ளை நடைபெற்ற நாஙு மணி நேரத்தில் தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.கருவாட்டு பேட்டையில் உள்ள பரணிகுமார் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கபட்ட  நகைகள் மீட்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.