மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்துக் கொள்ளலாம்! – ஈபிஎஸ் அறிக்கை!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் அதிமுக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு. அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான
வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் அதிமுகவில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் அதிமுக பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும்; அதிமுக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் சேருபவர்களும் மட்டுமே, அதிமுக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.