திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஊனையூரில் உள்ள ஸ்ரீபூரணை – புஷ்கலை அம்பாள் சமேத ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் திருக்கோயில் பங்குனி உத்தர தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட ஊனையூரில் மருங்காபுரி ஜமீனுக்குச் சொந்தமான ஊனையூர் வகையறா திருக்கோயில்களைச்
சேர்ந்த ஸ்ரீபூரணை – புஷ்கலை அம்பாள் சமேத ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார்
திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வழிபாட்டுத் தெய்வங்களாக ஸ்ரீஊனைக்காட்டு அய்யனார், விஷ்வநாதர் – விசாலாட்சி, விநாயகர், அகோர வீரபத்திரர் முதலிய பரிவார தெய்வங்கள் உள்ளது. இத்தலத்தில் வலது பக்கத்தில் வீற்றிருந்து அருள்பாவிக்கும் ஸ்ரீ நீலியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் ஆலயத் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 27-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினமும் ஊர்முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெற்று, அதில் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ஆம் நாளான இன்று திருத்தேரில் ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் உற்சவம் வைத்து அலங்கரித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வடம் பிடித்து பொதுமக்கள் தேரை இழுத்தனர்.
திருத்தேரோட்டம் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பின் மீண்டும் ஆலயத்தை
அடைந்தது. பின் மூலவர் மற்றும் ஸ்ரீ நீலியம்மன், அம்மன் ஆலயத்தில் சிறப்பு
வழிபாடுகள் நடைபெற்றது. மாவிளக்கு, பொங்கல், கரும்பு தொட்டில் என பக்தர்கள்
தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் ஊனையூரைச் சுற்றியுள்ள கொடும்பப்பட்டி, புதுப்பட்டி, கண்ணுக்குழி, திருநாடு, இலுப்பூர், தேனூர்,பாலக்குறிச்சி உள்ளிட்டப் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானப் பொதுமக்கள் கலந்து கொண்டு அய்யனாரின் திருத்தேர் தரிசனம் பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான டி.எம்.வி.கே.வி.சிவசண்முக பூச்சய நாயக்கர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
—-ரெ.வீரம்மாதேவி