தமிழ்நாட்டிற்கான இயற்கை பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டிற்கான மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புக்கான நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தும் இன்னும் நிதி வழங்கப்படவில்லை என சாடினார். இதனால், தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புக்களை சீரமைக்க முடியாத சூழல் உள்ளதால் விரைவில் நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நேரு காலத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், தற்போது, தமிழ்நாட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஏன் என தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ஆ.ராசா, தமிழ்நாட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தை கலைப்பது பற்றி நிலைக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டதா என வினவினார். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.