தாயை பின்தொடர்ந்து துள்ளிச் செல்லும் புலிக்குட்டிகள்… அழகிய காட்சியை கண்டுரசித்த சுற்றுலாப் பயணிகள்!

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், வனச்சாலையில் தாய் புலியை பின் நோக்கி பத்திரமாக கடந்து செல்லும் நான்கு புலி குட்டிகளை, சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பந்திப்பூர் தேசியப் பூங்கா, தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் மிகவும் பிரபலமான வனவிலங்கு காப்பகங்களில் ஒன்றாகும். விலங்குகள் மற்றும் பறவைகள் அதன் இயற்கையான சூழலில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக விளங்குகிறது.

மேலும், இது ஒரு சுற்றலாப் பகுதியாவும் இருக்கின்றது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை காண வருகின்றனர். அவர்களை வனத்துறையினர் நாள்தோறும் வாகனங்களில் சவாரி அழைத்துச் செல்கின்றனர்.

அவ்வாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் சில நேரங்களில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர். அதேபோல் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி செல்லும்போது, நான்கு குட்டிகளுடன் தாய் புலி உலா வந்துள்ளது.

அப்போது புதருக்குள் இருந்து வெளியே வந்த தாய் புலி சாலையில் ஆபத்து ஏதேனும் உள்ளதா என்று நோட்டமிட்டுள்ளது. பின் மெதுவாக சாலையை கடந்து சென்றதும் குட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக துள்ளி குதித்து தாய் புலியின் பின்னால் அழகாக ஓடிச் சென்றன. இந்த அழகிய காட்சிகளை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.