மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது-முதல்வர் மு.க.ஸ்டாலின்

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற தமிழ் பரப்புரை தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.…

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற தமிழ் பரப்புரை தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தியை நாடு முழுவதும் வளர்க்க இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சுதந்திரத்துக்கு முன்பே இயங்கி வருகிறது.

செம்மொழியான தமிழையும் நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பை தமிழக அரசு தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் வெளியிட்டார்.

பின்னர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக. தமிழ் வெறும் மொழி அல்ல தமிழ் நமது உயிர். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதை திமுக அரசின் தாரக மந்திரம்.

பேரறிஞர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரை கழகம் திட்டத்தை தொடங்குவது மகிழ்ச்சி. மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்க முடியாது. கடந்த ஓராண்டில் மட்டுமே 17 தொடர்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழை பாதுகாத்து விட்டோம். தமிழை பரப்ப வேண்டிய காலம். அதனால் தான் தமிழ் பரப்புரை கழகம் துவங்கி உள்ளோம். உணர்வால் உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.