11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை பூக்கள், சாக்லேட்டுகள் கொடுத்து வரவேற்றார். மேலும், பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.
தொடர்ந்து, மாணவிகளுடன் உரையாடிய அவர், வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது மாணவிகளிடையே பேசிய அவர், ஒவ்வொரு கல்வியாண்டும் சிறப்பாக படித்தது போல் இந்த ஆண்டும் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1.31 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உடற்கல்வித் துறைக்கென தனி பாடம் கொண்டு வருவது குறித்து 15ல் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
மாநில கல்வி கொள்கை குறித்து குழு அறிக்கை அளித்த பின் முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும். கோடை காலத்தையொட்டி வகுப்பறைகளில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தத் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்குப் போட்டி தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என்றார்.








