நாடாளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வரப்போகிறதா? முன்கூட்டியே வரப்போகிறதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு,பொன்முடி, எ வ வேலு, உதயநிதி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ ஆட்சிக்காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிமுக ஈடுபடவில்லை. திமுகவைப் பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இயக்கம். அதனால்தான் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறோம். வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஆதரவு தந்தார்கள்.
தொடர் வெற்றிக்கு காரணம் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றியதே. 100க்கு 99 % வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். 1% வாக்குறுதியையும் செப்டம்பர் 15 ஆம் தேதி நிறைவேற்றவுள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வரப்போகிறதா? முன்கூட்டியே வரப்போகிறதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டிருக்கிறது.
நடைபெற்றிருக்கும் இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள்தான் வெற்றிபெற்றுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கெங்கெல்லாம் தேர்தல் வந்துள்ளதோ, அங்கெல்லாம் இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள்தான் வெற்றி பெற்றுள்ள்ந்து. மக்கள் தயாராக உள்ளார்கள். அதனை நாம் பயன்படுத்திக் கொண்டுள்ளோம். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றாக வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.