தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த பிரபல சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கால் 9வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்து பிரபல சுற்றுலாத்தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து மகிழ மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளுக்கு வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த எட்டு நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அருவியில் குளித்து மகிழ வருபவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் கூறுகையில் ஏற்கனவே அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர் . மறு அறிவிப்பு வரும் யாரும் இங்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வேந்தன்







