விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை…

விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி,  அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா,  தேத்துறை,  குறும்பூர்,  நர்மா பள்ளம்,  நெடுங்கல்,  அத்தி, வடஆளப்பிறந்தான்,  இளநீர்குன்றம்,  வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை ‘சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை திமுக அரசு பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும்,  அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப் போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.  விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4.10.2023 அன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும்
என்றும்,  அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும்,  அந்தப் பகுதிகளில் இருக்கக் கூடிய இளைஞர்கள் மீதும்,  விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும்
திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக,  இந்த வழக்குகளைக் காரணம் காட்டி,  எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு,   தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை  திமுக அரசு போட்டிருக்கிறது.

மேல்மா கூட்டு ரோடு,  கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.  குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்,  இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் போல,  அங்கே முள் வேலிகளைக் கொண்டுவந்து தடுப்புகளை அமைத்து,  பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டுவந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான
போராட்டங்களை ஒடுக்குவதற்கும்,  தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும்,  திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக  திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.  இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.