தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன. அதேபோல், நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (20.1.26) தொடங்கியது. இது 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர். இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றவில்லை. அதனால் இன்று அவர் உரையாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆளுநர் உரையாற்றிய பின்னர் பேரவைத் தலைவா் அப்பாவு ஆளுநா் உரையை தமிழில் வாசிப்பார். பின்னர், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். பின்னர், அலுவல் ஆய்வுக் குழு கூடி ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.







