ஆங்கிலேயர்களால் தனது கணவனை இழந்து, அவர்களிடம் இருந்து இழந்த மண்ணை மீட்டெடுத்த முதல் பெண் விடுதலை போராளி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது பெருமைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து அவர்களின் சூழ்ச்சியால் நாட்டையும், கனவனையும் இழந்தும் தன்னம்பிக்கை தளராமல் போராடி இழந்த மண்ணை மீட்டு இந்திய அளவில் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்தான் என்பதில் சிவகங்கை மண் பெருமை கொள்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் ராணி சக்கந்தி முத்தாத்தாளுக்கும் 1730 ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர் வேலுநாச்சியார். ஆண் வாரிசு இல்லாததன் காரணமாக ஆண் வாரிசுபோலவே வளர்க்கப்பட்டார். வாள் வீச்சு, வில் அம்பு பயிற்சி, சிலம்பம், வளரி எரிதல், குதிரை ஏற்றம் என போர் பயிற்சிகள் அனைத்தும் கற்றதுடன் பல மொழிகளையும் கற்றறிந்தார். அத்தனையும் கற்று தேர்ந்த வேலுநாச்சியார் சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னரான முத்துவடுகநாததேவரை மணந்து இச்சீமையின் ராணியானார்.
இருபது ஆண்டுகால வாழ்க்கை ராணி வேலுநாச்சியாருக்கு இனிமையாக சென்ற நிலையில் தான் ஆங்கிலேயர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிக்க துவங்கியிருந்தனர். மேலும் ஆளும் மன்னர்களை வரி செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தி வந்த நிலையில் மன்னர் முத்துவடுகநாதர் வரி செலுத்த மறுத்து வந்த நிலையில் ஆர்காட் நவாப்பின் உதவியுடன் காளையார் கோவிலில் அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்த முத்துவடுகநாதர் மற்றும் வேலுநாச்சியாரை வெள்ளையர்கள் மறைந்திருந்து தாக்கினர். இதில் முத்துவடுகநாதர் கோவில் வாயிலிலேயே உயிரிழந்த நிலையில் வேலுநாச்சியார் மட்டும் தப்பி அங்கிருந்து குதிரை மூலம் கொல்லங்குடி வழியாக சிவகங்கை நோக்கி சென்றார்.
கொல்லங்குடி அருகே காட்டுப்பகுதிக்குள் வரும் போது ஆடு மேய்க்கும் பெண்ணிடம் சிவகங்கை செல்ல வழி கேட்க வழி கேட்பது சிவகங்கை ராணி வேலுநாச்சியார் என்பதை அறிந்த அப்பெண் வழி சொல்லி அனுப்ப பின் தொடர்ந்து வந்த வெள்ளையர்கள் அதே பெண்ணிடம் வேலு நாச்சியார் குறித்து கேட்க அவர் சென்றது குறித்து அந்த பெண் கூற மறுக்க ஆத்திரமடைந்த வெள்ளையர்கள் வாளால் அந்த பெண்ணின் தலையை வெட்டி துண்டித்தனர்.
இதனை மறைந்திருந்து பார்த்த வேலுநாச்சியார் தான் மீண்டும் சிவகங்கையை மீட்டு வருவேன் என்றும் சபதம் ஏற்று சிவகங்கை சென்றதுடன் அங்கிருந்து மருது சகோதரர்கள் தாண்டவராயன் பிள்ளை ஆகியோருடன் மேலூர் வழியாக திண்டுக்கல் சென்ற அவர் ஹைதர் அலியை நாடி அவருடன் உருதுமொழியில் உரையாடியதில் அவர் பெரும் மகிழ்ச்சியுற்றதுடன் அவரது உதவியுடன் அங்கு 8 ஆண்டுகள் தங்கி போருக்கு வியூகம் வகுத்து ஹைதர் அலி வழங்கிய காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை மற்றும் பீரங்கி ஆகியவைகளுடன் சிவகங்கை நோக்கி திரும்பினார்.
போர் வியூகம் வகுத்து தன் நாட்டில் தயார் படுத்திய உள்ளூர் மக்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். இறுதியாக வெள்ளையர்களின் ஆயுத கிடங்கை அளிக்க வேண்டும் என்கிற சூழலில் தன்னுடைய பெண் படை வீரர்களின் தளபதியாக இருந்த குயிலி தானே ஒரு மனித வெடிகுண்டாக மாறி ஆயுத கிடங்கில் குதித்து உயிரிழப்புப்படை தாக்குதல் நடத்தியதில் அதனையும் அளிக்க இறுதியாக வெள்ளையர்களை வென்று மீண்டும் சிவகங்கை மண்ணை கைப்பற்றினார்.
மேலும் தனக்காக இன்னுயிர் நீர்த்த உடையாள் என்கிற பெண்ணின் நினைவிடம் சென்ற வேலுநாச்சியார் அவரது நினைவிடத்தில் தனது வைர தாளியை கழட்டி வழங்கியதுடன் அவரை வணங்கி சென்றுள்ளார். இன்றும் அந்த கோவிலில் உள்ள வெட்டுடையாள் காளிக்கு விசேச நாட்களில் அந்த வைர தாளியை வைத்து வணங்கி வருகின்றனர்.
இன்றும் அந்த நினைவுகளை நினைவுருத்தும்விதமாக அவர் வாழ்ந்த அரண்மனை கம்பீரமாக சிவகங்கை மையத்தில் காட்சியளிக்கும் நிலையில் இந்த 75 வது சுதந்திர தினத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு மீண்டும் இழந்த மண்ணை மீட்டெடுத்த இந்தியாவின் முதல் வீரமங்கை வேலுநாச்சியாரை நாம் நினைவுகூறுவது ஒவ்வொரு இந்தியனின் கடமையே…