நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மணிப்பூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கை முடங்கியது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இதை “சிறப்பு அமர்வு” என்று விவரித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், தற்போதைய மக்களவையின் 13-வது அமர்வு என்றும், மாநிலங்களவையின் 261வது அமர்வு என்றும் அரசு பின்னர் தெளிவுபடுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவும் இந்த அமர்வின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லாத சில புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா பற்றிய பேச்சுக்களும் உலா வருகின்றன.
இதற்கிடையே இன்று காலை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது இரு அவைகளிலும் சந்திரயான் வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.