வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பல மாநிலங்களில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்கள் மூலம் வினியோகிக்கப்படுவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சிலநாட்களாக தக்காளி வரத்து தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று முன்தினம் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.20 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் நேற்று முன்தினம் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மேலும் 15 ரூபாய் குறைந்ததை தொடர்ந்து சில்லரையில் கிலோ ரூ.50 க்கு ஒரு சில இடங்களில் விற்கப்படுகிறது. இன்று 40 லாரிகளில் தக்காளி வந்ததால் விலை மேலும் சரிந்துள்ளது. கோயம்பேடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தக்காளி விலை குறைந்த அளவிற்கு, சென்னையின் மற்ற பகுதிகளில் விலை குறையவில்லை.
காய்கறி கடை வியாபாரிகள் இன்றும் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கிறார்கள். மொத்த மார்க்கெட்டில் குறையும் போது சில்லரை விற்பனையிலும் குறைக்க வேண்டும். தக்காளியை தொடர்ந்து பிற காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது.