பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சியினர் கூட்டம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஓரணியில் ஒன்றிணைவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பல்வேறு எதிர்கட்சிகளுடைய ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள நானும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் சென்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உருவாக்குவதாக இந்த கூட்டம் அமைந்தது. அகில இந்திய தலைவர்கள் அனைவரையும் சந்தித்தேன்.
குறிப்பாக நேற்று நான் பாட்னா சென்ற உடன் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக லல்லு பிரசாத் இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் விசாரித்தேன். லாலுவுடம் சிறிது நேரம் பேசினோம். அது எனக்கு பெரிய உற்சாகத்தை தந்தது.ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜக ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாக கொண்டதாக இந்த கூட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் கூட்டியிருந்தார்.
பாஜக என்று சொல்வதால் ஏதோ தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டமாக மட்டும் இதை யாரும் நினைக்க வேண்டாம். நாட்டின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை ஒடுக்கப்பட்ட தன்மையை, ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்து கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம். இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நான் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னேன்.
2023 ஜூன் 23-ஆம் தேதி கூடினார்கள் 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும் தான் வரலாற்றில் பதிவாக வேண்டும். என்று கூட்டத்திலே அழுத்தம் திருத்தமாக பேசினேன்.
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் அடைந்த அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அதே போல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தி வற்புறுத்தி எடுத்துச் சொன்னேன். சில முக்கியமான ஆலோசனைகளையும் அந்த கூட்டத்தில் வழங்கினேன்.
உதாரணமாக, எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்த கட்சி தலைமையில் கூட்டணியை அமைத்துக்கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதி பங்கீடுகளை மட்டும் செய்துக்கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்று சொன்னால் பொது வேட்பாளர் அறிவித்துக்கொள்ளலாம். தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.
அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்சம் செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது போன்ற 7 பிரச்னைகளை சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும். என்று அந்த கூட்டத்திலே பேசும் போது கூறியிருக்கிறேன்.
பாஜக-வை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவிலே ஏற்பட்டிருக்கிறது. ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில், பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்போதுதான் கருவாகியிருக்கிறது. அது உருவாக சில மாதங்கள் ஆகலாம். அடுத்தடுத நடவடிக்கைகளை பின்னர் உங்களுக்கு தெரிவிக்கிறோம். பாட்னாவில் கூடினோம் மகிழ்ச்சியாக திரும்பியிருக்கிறோம். என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனை அடுத்து ஏன் பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்தீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், நன்றி தெரிவிக்கும் வரை கூட்டத்தில் பங்கேற்றேன். மதிய உணவு இடவேளைக்கு பிறகே பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்திற்கு நேரம் ஆகிவிட்டதால் மதிய உணவு கூட உண்ண முடியாமல் அவர்களிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன். விமானத்தில் தான் மதிய உணவை உண்டேன். அதலால் நான் எந்த நோக்கத்தோடும் வெளியேறவில்லை. அதுதான் உண்மை.
தொடர்ந்து பேசிய அவர் முதற்கட்டமாக கூடினோம். என்ன செய்ய வேண்டும் என ஆலோசித்துள்ளோம். அடுத்த கூட்டத்தில் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
இதனை அடுத்து பிரதமர் வேட்பாளர் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.







